காஷ்மீரில் பள்ளிகளை தீக்கிரையாக்கும் கும்பலுக்கு வலை.. 14 பேர் போலீஸ் பிடியில்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளை சேதப்படுத்திய வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 9ம் தேதி முதல் காஷ்மீரில் கலவரம் ஆரம்பித்தது. தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டதையடுத்து இக்கலவரம் ஆரம்பித்து இன்னமும் தொடர்கிறது. தற்போது வீதிகளில் கலவரம் ஒடுங்கி, பள்ளிகள் மீது கலவரக்காரர்கள் ஆத்திரத்தை காட்டி வருகிறார்கள்.
பள்ளத்தாக்கில் இதுவரை 25 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எனவே விஷமிகளை பிடிக்க போலீஸ் நடத்திய வேட்டையில் 14 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 100 நாட்களுக்கும் மேல் பள்ளி செல்ல முடியாமல் உள்ள மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு, 50 சதவீத கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும் என்ற வாய்ப்பை பள்ளி கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது. பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 14 முதல் 15ம் தேதிவரை காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.