இன்று கர்நாடகா பந்த்.. பீதியில் பெங்களூர் தமிழர்கள்.. 16 ஆயிரம் போலீசார் குவிப்பு #karnatakabandh
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, கன்னட சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற உள்ளது.
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பந்த்துக்கு, 1100 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். பெங்களூர் டூரிஸ்ட் டாக்சி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா கூறுகையில், சுமார் 60 ஆயிரம் டாக்சிகள் இன்றைய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்களிடம் இதுகுறித்து முன்கூட்டியே தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
இதனிடையே பந்த் காரணமாக பெங்களூர்வாழ் தமிழர்கள் மத்தியில் இனம் புரியாத பயம் தொற்றிக்கொண்டுள்ளது. 1991ம் ஆண்டு காவிரி தீர்ப்பை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பெங்களூர், சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலரும் வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டு, சொத்துக்களையும், உடமைகளையும் இழந்தனர்.
அந்த மோசமான நிகழ்வு கர்நாடகா வாழ் தமிழர்கள் மனங்களில் இருந்து இன்னும் நீங்கவில்லை. எனவே காவிரி பிரச்சினை வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
இம்முறையும், தமிழர்கள் பெரும் அச்சத்திலுள்ளனர். எனவே தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக தமிழ் சங்க கூட்டமைப்பினர் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரை சந்தித்து தங்கள் பயத்தை தெரிவித்து பாதுகாப்பு கேட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பரமேஷ்வர் கூறியுள்ளார்.
இதனிடையே பெங்களூரில் 16 ஆயிரம் போலீசார் இன்று பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்., தலைமைச் செயலகம், பஸ், ரயில் நிலையங்கள், தமிழர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர், மேகரிக் இன்று பேட்டியளித்தார்.
36 பட்டாலியன் கர்நாடக ரிசர்வ் போலீஸ் படை, 30 பட்டாலியன் மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளதாகவும், தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைக்கும் வாகனம், கமாண்டோ வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும், 1 கம்பெனி அளவு அதி விரைவு படையினர் குவிக்கப்பட உள்ளதாகவும், பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மேலும் தெரிவித்தார்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றாலோ, உதவி தேவைப்பட்டாலோ, காவல்துறையின் உதவி எண்ணான 100க்கு டயல் செய்ய பெங்களூர் காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. ரோந்து வாகனங்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருக்கும் எனவும், போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள தயக்கம் வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.