மறைந்திருந்தது ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி என தெரியாது: மெகபூபா !
ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்த போது மறைந்திருந்தது புர்ஹான் வானி என்பது அவர்களுக்கு தெரியாது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்று வரை பல இடங்களில் அமலில் உள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 50 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மட்டுமே ராணுவத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்ததாக அறிகிறேன்.
ஒருவேளை பயங்கரவாதி புர்ஹான் வானி அங்கு இருப்பது ஏற்கெனவே தெரிந்திருந்தால், இந்த அளவுக்கு வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால், புர்ஹான் வானி கொல்லப்பட்டது திடீரென்று தெரிய வந்ததால், அரசால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும், அந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முயற்சி செய்ததால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.