விமானத்தில் செல்பி எடுக்க விரைவில் வருகிறது தடை!
டெல்லி: விமான பயணத்தின் போது, பயணிகளும், விமானப் பணியாளர்களும் விமானத்துக்குள் செல்ஃபி எடுத்துக் கொள்ள தடை விதிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான சட்டம் 1937-ன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்சியால் எந்த இடத்திலும் செல்பி எடுக்க முடிகிறது. விமான பயணத்தின்போது, பயணிகள் மட்டுமின்றி, விமானி உள்ளிட்ட ஊழியர்களும் ஈடுபடுவது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் 6 விமானிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, விமானத்தின் விமானிகள் அறையில் வைத்து 'செல்பி' புகைப்படம் எடுத்தது சர்ச்சையை கிளப்பியது. எனவே, விமான சேவையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை எடுக்க இந்த முடிவு எடுதக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே இருக்கும் சட்டதிட்டங்களுடன், புதிய கட்டுப்பாடுகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று விரைவில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.