''நான்தான் வாவா சுரேஷ்..'' கண்விழித்து பேசிய பாம்புபிடி மன்னன்! ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்
கோட்டயம்: பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாவா சுரேஷ் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். அந்தப் பகுதிகளில் வீட்டுப்பகுதிகளுக்கு வரும் விஷப்பாம்புகளைப் பிடிப்பதுதான் சுரேஷுக்கு வழக்கம். ராஜநாகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
வாவா சுரேஷ், பாம்பு பிடிப்பதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் வெறுங்கையால் பாம்புகளைப் பிடிப்பார் வாவா சுரேஷ். இவர் பாம்பு பிடிப்பதைப் பார்க்கவே மக்கள் கூட்டமாகக் கூடுவார்கள்.

வாவா சுரேஷ்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கோட்டயம், சங்கனாச்சேரி அருகில் இருக்கும் குறிச்சிப் பகுதியில் பாம்பு பிடிக்கச் சென்றார். 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் வாலைப் பிடித்து சாக்கில் அடைக்கும்போது, வாவா சுரேஷின் வலது தொடையில் பாம்பு கடித்தது. அப்படி இருந்தும், பாம்பைப் பிடித்து அடைத்துவிட்டு மயக்கமடைந்தார் வாவா சுரேஷ்.

மருத்துவமனை
இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் வாவா சுரேஷை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். வாவா சுரேஷுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் அவரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாவா சுரேஷ் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக தகவல் வந்ததும், அவருக்காக நிறையபேர் பிரார்த்தனை நடத்தினார்கள்.

முன்னேற்றம்
இந்த நிலையில் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் வென்டிலேட்டரிலிருந்து மாற்றப்பட்ட நிலையில், சாதாரணமாகவே சுவாசம் செய்தார். இதையடுத்து அவர் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. வாவா சுரேஷ் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்விழிப்பு
இதையடுத்து வாவா சுரேஷிடம் மருத்துவர்கள் பேச்சு கொடுத்தனர். அவரின் பெயர் குறித்து கேள்விகேட்ட போது, 'நான் சுரேஷ், வாவா சுரேஷ்' என்று பதில் கொடுத்துள்ளார். அதேநேரம், பாம்பு கடித்தது பற்றி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், மாரடைப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications