2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் சதி: ம.பி. முதல்வர் சவுகான்
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் எதோ சதி இருக்கிறது என்று ம.பி. முதல்வர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சாஜ்பூர் : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை சந்தை புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு பின்னால் எதோ சதி இருப்பதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் அருகே உள்ள சாஜ்பூரில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மாநிலம் முழுவதும் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டி விட்டு செயல்படப்பார்க்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும், என் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக குறை தீர்ப்பு மையத்தை எந்த நேரம் வேண்டுமானாலும் அணுகலாம். இனியும் விவசாயிகள் பிரச்னையில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 15 லட்சம் கோடியாக இருந்த பணப்புழக்கம், தற்சமயம் 16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் சந்தை புழக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது. இதற்குப் பின்னால் எதோ சதி இருக்கிறது. யாரோ குறிப்பிட்ட சிலர் பணத்தை பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications