சோனியா சுயசரிதை எழுதினால் மகிழ்ச்சியடைவேன்: நட்வர்சிங்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுயசரிதை எழுதினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை ‘ஒன் லைப் இஸ் நாட் எனப்' என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் அவர், சர்ச்சைக்குரிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நட்வர்சிங், சோனியா காந்தி 2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்காததின் ரகசியம் என்ன என்பதை அம்பலப்படுத்தினார்.
உண்மை இதுதான்
அப்போது அவர், தனது உள்மனம் கூறுவதால் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியா காந்தி அறிவித்தார். ஆனால் அதில் உண்மையில்லை. எங்கே தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி போன்று தாயாரும் கொல்லப்பட்டு விடுவாரோ என்ற பயத்தில் ராகுல் காந்தி தடுத்ததின் பேரில்தான் சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்கவில்லை என கூறினார்.
நானும் புத்தகம் எழுதுவேன்
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்ச்சையை கிளப்பிய நட்வர்சிங்குக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், சோனியா காந்தி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இதன் காரணமாக நான் வருத்தம் அடையவில்லை. நான் எதற்காக வருத்தம் அடைய வேண்டும்?
ராஜீவ், இந்திரா படுகொலை..
எனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். என் மாமியார் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டதை கண்டிருக்கிறேன். இவற்றுக்கெல்லாம் நான் வருத்தப்படும் இடத்தில் இல்லை. இவை எல்லாம் என்னை பாதிக்கவும் செய்யாது.
சுயசரிதையில் உண்மை
நான் என் சொந்த சுயசரிதையை புத்தகமாக எழுதுவேன். அப்போது, நீங்கள் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியும். நான் எழுதினால் உண்மை மட்டுமே வெளிவரும். இதில் நான் தீவிரமாக இருக்கிறேன் என்றார்.
நட்வர்சிங் வரவேற்பு
இந்நிலையில் இன்று இதற்கு பதிலளித்துள்ள நட்வர்சிங், எனது புத்தகம் சோனியாவை மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல. சோனியா மற்றும் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து என்னால் எழுத முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.
எனது கருத்துகள் குறித்து சோனியா உணர்ச்சிவசப்பட்டு புத்தகம் எழுதுவதாக கூறுகிறார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.