இனி பண்டிகை காலங்களில் டிக்கெட் கவலை இல்லை: 37 தடங்களில் ஏசி பிரீமியல் ரயில்
டெல்லி: இனி பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூற முடியாது ஏனெனில் 37 தடங்களில் குளுகுளு பிரீமியம் ரயில் ஓடப்போகிறது.
பண்டிகை காலங்களில் ரயிலில் டிக்கெட் கிடைப்பது பெரிய பாடாக இருக்கும். இனி ரயில் டிக்கெட் பற்றிய கவலையே வேண்டாம். காரணம் ரயில்வே துறை குளுகுளு பிரீமியம் ரயில்களை இயக்கவிருக்கிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டின் போது இந்த பிரீமியம் ரயில் டெல்லி-மும்பை இடையே இயக்கப்பட்டது.
3 அடுக்கு ஏசி ரயிலில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரையும், இரண்டு அடுக்கு ஏசியில் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.17 ஆ.யிரம் வரையும் கட்டணம் செலுத்த வேண்டும். ராஜ்தானி ரயிலை விட இந்த பிரீமியம் ரயில் கட்டணம் ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
பண்டிகை காலங்கள், கோடை விடுமுறையின்போது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து பயணிக்கும் நபர்களுக்காக தான் இந்த பிரீமியம் ரயில்கள். இந்த ரயில் கோவா, பிகானிர் உள்ளிட்ட 37 தடங்களில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து ரயில் வாரிய அதிகாரி பாண்டே கூறுகையில்,
ஆண்டு முழுவதும் காத்திருப்பு பட்டியல் உள்ள 37 தடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த தடங்களில் பிரீமியம் ரயில்களை இயக்க உள்ளோம். இந்த ரயில்களின் அடிப்படை கட்டணமே பிற ரயில்களின் தட்கல் டிக்கெட்டுக்கு சமமாக அல்லது அதிகமாக இருக்கும்.
இந்த ரயில்களால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பிற ரயில்களின் வருமானம் பாதிக்காது. இது அதிக பணம் கொடுத்து பயணம் செய்யும் நபர்களுக்காக தான் என்றார்.
பிரீமியம் ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.