வகுப்பில் செல்போனில் எஸ்.எம்.எஸ்... கண்டித்த ஆசிரியர்... தற்கொலை செய்து கொண்ட டெல்லி மாணவன்!
டெல்லி: டெல்லியில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று ஆசிரியர் கண்டித்த காரணத்தினால் மாணவன் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண். இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை இவர் பள்ளிக் கூடத்துக்கு சென்ற போது செல்போன் கொண்டு சென்றிருந்தார். வகுப்பு அறையில் பாடம் நடந்து கொண்டிருந்த போது செல்போனில் யாருக்கோ எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்.
கண்டித்த ஆசிரியர்:
இதை கவனித்த ஆசிரியர் அவனை அழைத்து கண்டித்தார். மேலும் இனி பள்ளிக்கு வரும் போது செல்போன் எடுத்து வரக்கூடாது என்று எச்சரித்தார்.
செல்போன் அனுமதி இல்லை:
அதோடு அந்த மாணவனிடம் இருந்து செல் போனையும் வாங்கி வைத்துக் கொண்டார். பெற்றோரை அழைத்து வந்தால் தான் செல்போனை திருப்பித்தருவேன் என்றும் ஆசிரியர் கூறி விட்டார்.
தூக்கு போட்டு தற்கொலை:
ஆசிரியர் உத்தரவால் மாணவர் தருண் மனம் உடைந்தார். சனிக்கிழமை மாலை வீடு திரும்பிய அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அன்றிரவு அவர் தன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை:
தற்கொலை செய்யும் முன்பு மாணவர் தருண் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். போலீசார் தருண் உடலை கைப்பற்றி வீட்டை சோதனையிட்ட போது அந்த கடிதம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.