ஒலிம்பிக்கிலிருந்து திரும்பிய தடகள வீராங்கனைக்கு பன்றிக்காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெங்களூர்: இந்திய தடகள வீராங்கனை சுதா சிங், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் தடகள போட்டியில் பங்கேற்றார் சுதா சிங். 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்ற சுதா சிங் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, கடந்த 20ம் தேதி சுதா நாடு திரும்பினார்.
வரும் போதே அவருக்கு காய்ச்சலும் உடல் வலியும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல இயக்குநர் ஷியாம் சுந்தர் கூறுகையில், சுதா சிங் ஜிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரத்த சோதனையில், சுதாசிங்கிற்கு எச்1என்1 எனப்படும், பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு பெங்களூர் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தில்லை என்றும், 3 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்றும், டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள், சுதா சிங்கிற்கு ஆகும் மருத்துவ செலவை கர்நாடக அரசு ஏற்கும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.