சுனந்தா மர்ம மரணம்: லேப்டாப், 3 செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பபட்டன!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் மர்மமான மரணம் குறித்த வழக்கில் 3 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். இதைத்தொடர்ந்து சீலிடப்பட்ட நட்சத்திர ஓட்டலின் அறை முதல் முறையாக திறக்கப்பட்டது.
அந்த அறையில் இருந்த போர்வை, திரவ பொருட்களின் தடம் காணப்பட்ட தரை விரிப்புகள், உடைந்த கண்ணாடி பொருட்கள் ஆகியவை அனைத்தும் தடயவியல் ஆய்வுக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் 3 செல்போன்கள், லேப்டாப் ஆகியவையும் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுனந்தாவின் இ மெயில்களில் அவர் கடைசியாக யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.