தனியார் வானொலிகளில் செய்தி ஒலிபரப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் தனியார் வானொலிகளில் செய்தி ஒலிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடுகையில், செய்தி ஒலிபரப்ப தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது போல், வானொலிகளிலும் செய்தி ஒலிபரப்ப அனுமதி வழங்க வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டியை விட வானொலிப் பெட்டியை குறைந்த செலவில் வாங்கி விடலாம் என்றார்.
தலைமை நீதிபதி சதாசிவம் கூறும்போது, தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒலிபரப்ப மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கும்போது வானொலிக்கு அனுமதி மறுப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.