நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: அரசு வழக்கறிஞராக கோபால் சுப்பிரமணியம் பெயர் பரிசீலனை!
டெல்லி: நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் பெயர் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
சொலிசிட்டர் ஜெனரலுடன் ஆலோசனை
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்னிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கலந்துகொண்டார். இந்த வழக்கைக் கையாளுவதற்கு நேர்மையான, ஆழ்ந்த சட்ட ஞானமுள்ள வழக்கறிஞர் தேவை என தலைமை நீதிபதி அப்போது கூறினார்.
கோபால் சுப்பிரமணியம் பெயர்
சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது கோபால் சுப்ரமணியத்தின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. நாடாளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அவர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக வாதாடியுள்ளார் என சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
ஒப்புதல் தேவை
"சிறப்பு அரசு வழக்குரைஞராகப் பொறுப்பேற்க அவரது ஒப்புதல் தேவை. இதற்கு முன்பு என்னுடைய மற்றொரு முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்தப் பொறுப்பை ஏற்குமாறு நீங்கள்தான் அவரை வற்புறுத்த வேண்டும் என தலைமை நீதிபதி லோதா அங்கிருந்த வழக்கறிஞர்களை நோக்கிக் கூறினார்.
நீதிபதிகள் நியமன விவகாரம்
முன்னாதாக, நீதிபதிகள் நியமனக் குழு, கோபால் சுப்ரமணியத்தின் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு அவரை நிராகரித்துவிட்டது.
பரிசீலனை
இதை மனதில் வைத்தே நீதிபதி லோதா தனது முந்தைய முயற்சியின் தோல்வி பற்றியும் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் பற்றியும் குறிப்பிட்டார். சிறப்பு அரசு வழக்கறிஞர் பொறுப்புக்கு டெல்லி வழக்காடுவோர் பெயரை மட்டும் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதி லோதா குறிப்பிட்டார்.