ரயில்வே கண்டிப்பாக தனியார் மயமாக்கப்படாது – ரயில்வே அமைச்சர் சுரேஷ்பாபு!
டெல்லி: ரயில்வே கண்டிப்பாகத் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார். ரயில்வேயை தனியார் மயமாக்கலாம் என்று மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அந்த பரிந்துரைப்படி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கும் உரிமையும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ரயில்வே இலாகாவை தனியார் மயம் ஆக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "நிதி ஆயோக் உறுப்பினர் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. ரயில்வேக்கு தனி பட்ஜெட் தேவை இல்லை என்றும் அந்த குழு கூறியுள்ளது.
ஆனால் இந்த பரிந்துரைகள் அனைத்தையும் ரயில்வே தொழிற்சங்கங்கள் நிராகரித்து விட்டன. டெப்ராய் குழு பரிந்துரைகளை ஏற்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளன. எனவே ரயில்வேயை தனியார் மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ரயில்வேயை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வி ஏன் எழுந்தது என்று தெரியவில்லை. அதற்கான அவசியமே இல்லை. அது பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை.
அதற்கு பதில் நாடெங்கும் ரயில் வேலையை சீர்திருத்தம் செய்து மேம்படுத்தும் முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். டெப்ராய் குழு பரிந்துரைகளை நாங்கள் இன்னும் படிக்கவில்லை. ரயில்வேக்கான திட்டங்கள் திட்டமிட்டபடி அமல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வேக்ககான நிதி ஆதாரத்தில் எந்த சிக்கலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.