இப்படியும் ஒரு சாமியாரா? தனது காரில் சிக்கி வாலிபர் மரணமடைந்ததால் தற்கொலை செய்த சாமியார்!
ஹாவேரி: தனது கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானதால், மனம் வருந்திய சாமியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹாவேரி மாவட்டம், கனகல் தாலுகாவிலுள்ள ஹுல்லட்டி கிராமத்தில் நற்பணிகள் செய்ய திங்கலேஷ்வர் மடத்தின் சார்பில் நியமிக்கப்பட்டவர் மகந்த சுவாமி. கடந்த சில மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து, மரம் நடுதல் உள்ளிட்ட சமூகசேவைகளை செய்து வந்துள்ளார். மடத்தின் சார்பில் விரைவில் அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டும் பணிகளிலும் இறங்கியுள்ளார்.

கிராமத்தினரும் சுவாமியுடன் அன்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, காரை ஓட்டியபடி ஹூப்ளிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் சென்ற நபர் மீது கார் மோதிவிட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விஷயம் அறிந்த மகந்த சுவாமி, மிகுந்த மனவேதனையடைந்தார். தன்னால் ஒரு உயிர் பறி போய்விட்டதே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார். இதையடுத்து, சாமியார்களுக்கான மடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. தற்கொலை கடிதத்திலும், நடந்த சம்பவத்தை அவர் விவரித்திருந்தார்.












Click it and Unblock the Notifications