விவசாயிகள் நலனை பாதுகாப்பதன் லட்சணம் இதுதானா? தமிழக பாஜக தலைவர்கள் உணருவது எப்போது?
கர்நாடக தேர்தலை காரணம் காட்டி வரைவு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டது மத்திய அரசுக்கு தமிழகம் மீது அக்கறை இல்லை என்பதாகும்.
டெல்லி: கர்நாடக தேர்தலை காரணம் காட்டி வரைவு அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டது மத்திய அரசுக்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதற்கு இதைவிட சிறந்த சான்று தேவை இல்லையே.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்ற முன்வருவதில்லை.
சட்டரிதீயாக அணுகினாலும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருந்தது. அதில் காவிரி நீர் பங்கீட்டுக்காக ஒரு திட்டத்தை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் மத்திய அரசு அதை நிறைவேற்றாமல் கால அவகாசம் கேட்டது.
பாஜக தீவிரம்
கர்நாடகத்தில் வரும் மே12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலில் எப்படியாயினும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் மனம் கோனாமல் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை வாய் சொல் வீரர்களான தமிழிசை, எச் ராஜா உள்ளிட்டோர் மறுத்துவந்தனர்.
கால அவகாசம்
காவிரி விவகாரத்தில் திட்டம் ஒன்றை உருவாக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தை தொடர்ந்து மேலும் இரு வாரங்களுக்கு கால அவகாசம் வழங்க மத்திய அரசு கேட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்ட போதிலும் அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு வரைவு திட்டத்தை அனுப்பி ஒப்புதல் வாங்க முடியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்துக்கு நல்லது நடக்கும்
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டம் நடந்த போதெல்லாம் மத்திய அரசு தமிழகத்துக்கு நல்லது செய்யும். விவசாயிகளின் துயரை துடைக்கும் என்றே பாடி வந்தனர். ஆனால் தமிழகத்தின் மீது தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை மத்திய அரசு பட்டவர்த்தனமாக நிரூபித்துவிட்டது.
கொதித்த தமிழகம்
காவிரிக்காக போராட்டங்கள் நடத்தி தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்த நிலையில் அதுவும் காவிரிக்கான வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரசாரத்துக்காக அமைச்சர்கள் சென்றுள்ளது எத்தனை அயோக்கியதனம். அதிலும் கர்நாடக தேர்தலை காரணம் காட்டியே கால அவகாசம் கேட்பது எத்தனை கேவலமான ஒரு விஷயம். பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் திராவிட கட்சிகள் இருக்கும் வரை காலூன்ற முடியாது என்ற காரணத்தால் தமிழக நலன்களில் எள் முனை அளவும் அக்கறை கொள்ளாமல் முதுகில் குத்தி வருகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.