டெல்லி ஜவஹர்லால் பல்கலையில் தமிழக மாணவர் தற்கொலை ஏன்? பகீர் தகவல்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜாதி கொடுமையால் நிகழ்ந்த இந்த பரிதாப சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில். படித்து வந்த தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்துள்ளார். அவர், பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் முனிர்கா பகுதியில் தனது நண்பரின் வீட்டில் தூக்குப் போட்டு இறந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களின் ஜாதிக் கொடுமையால் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக தனது பேஸ்புக் தளத்தில் பதிவு செய்த தகவல், நண்பர்களிடையே அதிகம் பகிரப்பட்டிருக்கிறது.
அந்த பதிவில், பல்கலைக்கழகத்தின் எம்.பில்/பிஎச்டி சேர்க்கையில் ஜாதி சம உரிமை வழங்கப்படவில்லை. இதேபோல், வைவா - வோசே (வாய்மொழித் தேர்வு) என்று எதிலும் சமஉரிமை வழங்கப்படவில்லை. எல்லாவற்றிலும் சம உரிமை மறுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்ப்புக் குரல்களை சமூக இணையதளங்களில் பதிவு செய்யவும் மறுக்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வியை வழங்கவும் மறுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இதற்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஜாதிக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியிருந்தது. இந்த நிலையில், தமிழக மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.