காலையில் ஆசிரியர்.. மாலையில் தீவிரவாதி.. பள்ளி புகுந்து தூக்கிய போலீஸார்.. அது என்ன 'ஸ்பிரே பாம்'?
பாகிஸ்தானில் வசிக்கும் தனது தாய்மாமா மூலமாக ஆரிப்புக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
: ஜம்முவில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தின் போது இரட்டை குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காலையில் ஆசிரியராகவும், மாலையில் தீவிரவாதியாகவும் மாறி அந்நியனை போல சுற்றிய அந்த நபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர்.
மேலும், காஷ்மீரில் இதுவரை எந்த தீவிரவாதியும் பயன்படுத்தாத 'ஸ்பிரே பாம்' (spray bomb) என்ற புது வகையான பயங்கர வெடிகுண்டையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பயங்கர குண்டுவெடிப்பு
ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் கடந்த 21-ம் தேதி இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் உடல் பாகங்களை இழந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராகுல் காந்தி ஜம்முவுக்கு நுழைவதற்கு சற்று முன்பு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காலையில் ஆசிரியர்.. மாலையில் தீவிரவாதி
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காஷ்மீர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ரியாஸி பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் இந்த தாக்குதலை நடத்தியது முகமது ஆரிப் (37) என்பது தெரியவந்தது. மேலும், இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருப்பதும் கண்டறியப்பட்டது. இவர் காலையில் ஆசிரியர் வேலையை பார்த்துவிட்டு மாலையில் தீவிரவாத செயலில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

"பாகிஸ்தான் மாமா"
இதன் தொடர்ச்சியாக, போலீஸார் இன்று அவரை பள்ளிக்குள் புகுந்து அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, இவரது தாய்மாமா பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் மூலமாக ஆரிப்புக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்களின் உத்தரவின் பேரில் காஷ்மீரில் பல தீவிரவாத தாக்குதல்களை தான் நடத்தியதாக முகமது ஆரிப் ஒப்புக்கொண்டார்.

அதிரவைத்த 'ஸ்பிரே பாம்'
ஜம்முவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல் மட்டுமின்றி வைஷ்ண தேவி கோயில் பக்தர்கள் மீதான தாக்குதலையும் ஆரிப் நடத்தியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், அவரது ஸ்பிரே பாமையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சென்ட் பாட்டிலை திறந்து ஸ்பிரே பட்டனை அழுத்தினால் குண்டு வெடிக்கும் வகையில் அது 'செட்' செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் இதுபோன்ற வெடிகுண்டை பார்ப்பது இதுவே முதன்முறை என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த ஸ்பிரே பாம் எங்கு தயாரிக்கப்பட்டது, இதை வைத்து எங்கு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து முகமது ஆரிப்பிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications