தந்திக்கே மரண செய்தி அளித்த இந்தியா! சேவையை நிறுத்தி ஓராண்டு நிறைவு
சென்னை: இந்தியாவில் 160 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ப, துன்பங்களை சுமந்து வந்த தந்தி சேவை முடிவுக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர், 1832ல் மின் காந்த அலைகளில் செயல்படும் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார். அதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் என்பவர், 1837ல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார். பின், அவரது உதவியாளர் ஆல்பிரெட் வெயில் 'மோர்ஸ் கோட்' சிக்னலை கண்டுபிடித்தார். இதன்மூலம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், 3 கி.மீ. தொலைவுக்கு உலகின் முதலாவது தந்தி 1838 ஜனவரி 11ம் தேதி அனுப்பப்பட்டது.
இந்தியாவில் தந்தி சேவை
இந்தியாவில் தந்தி சேவை முதல் முறையாக ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது 1850ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தா துறைமுகத்துக்கும், இங்கிலாந்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1854ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் தந்தி சேவையை கொண்டு வந்தனர்.
தந்தியின் முக்கியத்துவம்
வெளியூரில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல முடியாதவர்கள் வாழ்த்து தெரிவிக்கவும், வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்கள் அது குறித்து தகவல் தெரிவிக்கவும், நெருக்கமான ஒருவர் இறந்து விட்டால் தகவல் தெரிவிக்க, வேலை வாய்ப்புக்கான நேர் காணல் அழைப்பு போன்றவவை அனுப்ப தந்தி சேவை பயன்பட்டு வந்தது. கிராமங்களில் ஒருவர் வீட்டிற்கு தந்தி வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ஏதோ என்று பதறும் நிலைமையும் இருந்தது.
தந்திக்கு மவுசு இல்லை
ஆனால் இன்டர்நெட், செல்போன் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்தவுடன் தந்தி சேவையின் பயன்பாடு படிப்படியாக மங்கத் தொடங்கியது. இதனால் தந்தி சேவையை நிறுத்தி கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்தது. கடந்தாண்டு, நாட்டில் 75 தந்தி சேவை மையங்கள் இருந்தன. ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் பிஎஸ்என்எல்லில் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.
தந்திக்கே தந்தி அடித்த நாள்
கடந்தாண்டு 14ம்தேதியோடு தந்தி சேவை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. கடைசி நாளின்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள தந்தி அலுவலகங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று தங்கள் உறவினர்களுக்கு கடைசியாக வாழ்த்து தந்தி அனுப்பி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஓராண்டு நிறைவு
கடந்த 160 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வாழ்க்கையோடு இன்பங்களையும், துன்பங்களையும் சுமந்து வந்து உறவாடிய தந்தி சேவை முடிவடைந்து ஓராண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும், நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் தந்தியின் சேவையை நினைத்து நெகிழ்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதை பற்றி ஆர்வமுடன் சொல்லி வருகிறார்கள்.