"புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா உள்ளது" சேவலால் பக்கத்து வீட்டு பெண் மீது புகார்
போபால்: மத்திய பிரதேசத்தில் சேவல் கூவுவதால் தனது தூக்கம் பாதிக்கப்படுவதாக கூறி பக்கது வீட்டு பெண் மீது மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை பெற்றுள்ள போலீசார், பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது ஆலோசித்து வருகிறார்களாம்.
கிராமப்புறங்களில் இயற்கை அலாரம் என்று சொல்லப்படும் அளவுக்கு அதிகாலையில் சரியாக சேவல் கூவுவதை காண முடியும்.
நகர்ப்புற வாழ்க்கையில் மூழ்கி இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் பெரும்பாலும் இருக்காது. ஆனால், இப்போதும் கூட கிராமப்புறங்களில் அதிகாலை சேவல் கூவுவதை கேட்க முடியும்.
கைநிறைய சம்பளம்.. சேலத்திலேயே மத்திய அரசு பணி..ஐடிஐ முடித்தவர்கள் முதல் டாக்டர் வரை விண்ணப்பிக்கலாம்
குருவிகளின் கீச்சிடும் சத்தம்
செல்போன்கள் ஆதிக்கத்திற்கு முந்தைய காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகாலை சேவல் கூவும் சத்தத்தில் எழுந்து தங்கள் வேலைக்கு புறப்படுவதைக் கூட வாடிக்கையாக கொண்டிருந்தனர். இப்போதும் கூட விவசாயிகள் இதை பின்பற்றுவதை பார்க்க முடியும். சேவல் கூவுவதே நாம் வாழும் சூழல் எந்த அளவுக்கு இயற்கை சார்ந்து அமைந்து இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் அளவுக்கு இருக்கும். நகர்புற வாகன இரைச்சலுக்கு மத்தியில் அதிகாலையில், சேவல் கூவுவதையும் குருவிகளின் கீச்சிடும் சத்தங்களையும் கேட்பதற்காக அவ்வப்போது சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வார்கள் என்று கூட சொல்லலாம்.
பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார்
ஆனால், சேவல் கூவுவது தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறி பக்கத்து வீட்டுக்காரர் மீது மருத்துவர் ஒருவர் போலீசில் புகார் தொடுத்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் பலசியா நகரில் வசித்து வரும் மருத்துவர் அலோக் மோடி என்பவர், சேவல் கூவுவதால் தனக்கு பெரும் தொந்தரவு இருப்பதாக கூறி போலீஸ் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து இருப்பதுதான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
5 மணிக்கே கூவி என்னை எழுப்பி விடுகின்றன
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அலோக் மோடி அளித்து இருக்கும் புகாரில், எனது வீட்டின் பின்புறம் வசிக்கும் பெண் தன்னுடைய வீட்டில் நாய்கள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வரும் சேவல்கள் அதிகாலை 5 மணிக்கே கூவி என்னை எழுப்பி விடுகின்றன. பணி முடிந்து இரவு வெகு நேரம் கழித்து வரும் எனக்கு இது பெரும் தொந்தரவாக இருக்கிறது. அதிகாலையில் எழுப்பி விடுவதால் எனக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, போலீசார் தலையிட்டு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 133-ல் வழக்குபதிவு?
பல சிக்கலான வழக்குகளுக்கு கூட எளிதாக தீர்வு காணும் போலீசார், இந்த புகாருக்கு எப்படி தீர்வு கொடுப்பது என தலையில் அடித்துக் கொள்ளதாக குறைதான். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போதும் பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாவிட்டால் சட்டப்பிரிவு 133- ல் வழக்குபதிவு செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இம்சை அரசன் காமெடி போல
சட்ட விரோத இடையூறு மற்றும் தேவையற்ற சத்தம் ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை சட்டப்பிரிவு 133- கூறுகிறது. விரைவில், இருவரையும் அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவே போலீசார் விரும்புகிறார்களாம். "புறாவுக்கு போரா... பெரிய அக்கப்போராக அல்லவா உள்ளது" என்று வடிவேலு இம்சை அரசன் படத்தில் கூறுவார். அதை நினைவுபடுத்தும் வகையில்தான் இந்த சம்பவம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கூறிவருகின்றனர்.