33% இந்தியர்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு... ஒரு ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியர்களில் 33 சதவீதம் பேர் அவர்களுக்குத் தெரியாமலேயே ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
போதிய உடல் உழைப்பின்மை, ஊட்டச்சத்து இல்லாத சாப்பாடு என முந்தைய தலைமுறை மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையிலிருந்து விலகி தற்போதுள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், சிறு வயதிலேயே பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு அவர்கள் ஆளாகின்றனர். ஆனால், இதில் மிகப்பெரிய கொடுமை பல நோய் குறித்த விழிப்புணர்வே அவர்களுக்கு இல்லாமல் இருப்பது தான்.
அந்தவகையில், 'கார்டியாலஜி சொசைட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு, நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் விபரமாவது:-

மோசமான வாழ்க்கை முறை...
இந்தியர்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. சிகரெட் புகைக்காத, மது அருந்தாத பலருக்கும் ரத்த அழுத்த நோய் வந்துள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறை தான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாஸ்ட் புட் மோகம்...
தற்போது பலர், பாஸ்ட் புட் உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர். எனவே, இத்தகையவர்களுக்கே நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இரவுநேரப் பணி...
அதோடு, ஐ.டி., துறையில் இரவு பணிக்கு செல்பவர்கள் நேரம் கெட்ட நேரத்தில் அதிக உணவை உண்பதாலும் இதுபோல் உடல் உபாதைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

வேலைப்பளு...
வேலை காரணமாக பலர் வீட்டில் உணவு தயாரிக்காமல் கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு இரவில் கண்விழித்து வேலை பார்க்கின்றனர். இதனால், உடலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

மன அழுத்தம்...
மேலும், இது குறித்து ஆய்வை நடத்திய கார்டியாலஜி சொசைட்டி ஆய்வாளர்கள் கூறுகையில், "ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் 2 பங்கு பேருக்கு, அந்த நோய் வந்ததே தெரியவில்லை. பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமும் பலருக்கு இந்நோய் தாக்கியதற்கு காரணம்.

வாழ்க்கைமுறை...
இவர்கள் வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும். 'பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சைலண்ட் கில்லர்...
ஏனெனில், ரத்த அழுத்தம் என்பது ஒரு 'சைலன்ட் கில்லர்'. ரத்த அழுத்த நோய் வந்தவர்களை இதய நோய் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே உஷாராகுங்கள்...
சிறு வயதிலிருந்தே இதில் தீவிர கவனம் செலுத்தச் சொல்கிறார்கள் டாக்டர்கள். சிறார்கள் இன்று வீட்டிலேயே முடங்கியுள்ளனர். டிவி, செல்போன், கேம்ஸ், நொறுக்குத் தீனி என்று மூழ்கிப் போயுள்ளனர். இதிலிருந்து அவர்களை மீட்டாக வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுரையாகும்.
வைத்தியருக்குத் தருவதை வாணிபருக்குக் கொடு என தெரியாமலா நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications