உம்மன்சாண்டி மீது ஊழல் வழக்கு... மீண்டும் பெரிதாகும் சோலார் பேனல் ஊழல் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீது சோலார் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு உருவாகியுள்ளது. பல மாதங்களுக்குப் பின் சோலார் பேனல் ஊழல் மீண்டும் பெரிதாகி உள்ளது.
கேரளாவில் கடந்த ஆட்சி காலத்தில் உம்மன்சாண்டி முதல்வராக இருந்த போது சோலார் மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது, சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, அவரது அமைச்சரவையில் இருந்த திருவச்சூர் ராதாகிருஷ்ணன், ஆர்யாடன் முகமது ஆகியோர் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, அவரது அமைச்சர் சகாக்கள், உதவியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து தலைமை வழக்கறிஞரிடம் கேட்டு, பின் அவரது ஆலோசனையின்படி மேற்கண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.