காட்டுமிராண்டி போல் நடந்து கொண்டார் ராம் ரஹீம்... நீதிபதி காட்டம்
காட்டுமிராண்டி போல் நடந்து கொண்ட ராம் ரஹீமுக்கு கருணை காட்ட முடியாது என்று சிபிஐ நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
சன்டிகர்: இயற்கைக்கு மாறாக பெண்களிடம் காட்டுமிராண்டி போல் நடந்து கொண்ட ராம் ரஹீமுக்கு கருணை காட்டும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் தெரிவித்தார்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் கடந்த 1999-களில் ஆசிரமங்களைத் தொடங்கினார். அவரது செயல்பாட்டில் ஈடுபாடு கொண்ட ஏராளமான சீடர்கள் ஆசிரமத்துக்கு வரத் தொடங்கினர்.
நவீன சாமியாரின் எழுச்சியால் பெண் சீடர்களும் அவர் ஆசிரமத்துக்கு சென்றனர். இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆசிரமத்திற்கு வந்த இரு பெண்களை தொடர்ந்து 3 ஆண்டுகளாக ராம் ரஹீம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
14 ஆண்டுகளுக்கு பிறகு...
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 25-ஆம் தேதி சாமியார் ராம்ரஹீம் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை விவரங்கள்
ராம் ரஹீமுக்கு தண்டனை விவரங்களை அறிவிக்க சுனாரியா சிறைக்குச் சென்றார் சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை
அப்போது இரு பெண்களை மிகவும் கொடூரமாக பலாத்காரம் செய்த ராம்ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ராம் ரஹீம் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கருணை காட்டுங்கள் என்று கைகூப்பி கெஞ்சினார்.
இயல்புக்கு மாறாக...
நீதிபதி கூறுகையில், பாதிக்கப்பட்ட இரு பெண்களும் ராம் ரஹீமை கடவுளின் உருவமாகதான் பார்த்தார்கள். ஆனால் இதுபோன்று ஏமாந்து, குருட்டுத்தனமாக பின் தொடர்ந்து பெண் பக்தர்களை இயல்புக்கு மாறாக அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடவுளின் பெயரில்...
மத அமைப்புகளுக்கு தலைவர் என்ற போர்வையில் இது போன்ற குற்றவாளிகள் காலங்காலமாக நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆன்மீகம், புனிதம் , சமூக, கலாச்சார மற்றும் மத அமைப்புகள் ஆகியவற்றை களங்கப்படுத்துகின்றனர். இதனால் பாரம்பரியமான நாட்டில் ஈடுசெய்ய முடியாத இழப்புகள் இவர்களால் நிகழ்கின்றன.
Recommended Video
காட்டு மிராண்டி
தனி மனித ஒழுக்கத்தை மீறி இரு பெண்களிடமும் காட்டுமிராண்டி போல் நடந்து கொண்டவர் ராம் ரஹீம். அவருக்கு கருணை காட்டும் தகுதியை அவர் இழந்து விட்டார். எனவே அவர் இந்த தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கறாராக தெரிவித்துவிட்டார்.