லெப்ட்.. ரைட் மட்டும்தான்.. நடுநிலை என்பதே கிடையாது! - இயக்குநர் வெற்றிமாறன் பளீர் பேச்சு!
கேரளா: நடுநிலைவாதி என்று சொல்பவரும் வலதுசாரிதான் என பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட திருவிழாவில் பேசியுள்ளார்.
விழாவில் பங்கேற்ற பலரது கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்தார். உங்கள் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் இயற்கையாக உள்ளது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "என் திரைப்படத்துக்கு தேவையான உலகத்தை நான் தேர்வு செய்வேன்.
பின்னர் அந்த உலகத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். அதிலிருந்து கதையை தேடுவேன். நான் எப்போதும் ஒரு கதையை தேர்வு செய்த பின்னர் ஒரு உலகத்தில் அதை பொறுத்த மாட்டேன்.

மக்களின் பிரச்சனைகளை தெரிந்து படம் எடுப்பேன்
ஒரு உலகத்தில் நான் கற்க, புரிந்துகொள்ள அல்லது அதிலிருந்து வெளியே சொல்ல ஏதாவது இருந்தால் அங்கு செல்வேன். அங்குள்ள மக்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். அவர்களின் பிரச்சனைகளை தெரிந்துகொள்வேன். அதை வைத்து கதை தயாரிக்க முயற்சிப்பேன். சில நேரங்களில் அந்த கதையை சொல்ல முடியாமல் தோல்வி அடைந்துள்ளேன்.

துணை நடிகர்கள் தேர்வு முக்கியம்
ஆனால், அந்த உலகத்தை சரியாக காட்டுவது முக்கியம். கதைக்களம் நடக்கும் பகுதியை சேர்ந்தவரை சிறிய வேடங்களில் நடிக்க அழைத்துவரும்போது, அவர் தமது பகுதிக்கு உரிய சில விசயங்களை மாற்ற சொல்லி பரிந்துரைப்பார். அதை வைத்து கதைக்களத்தை மாற்றுவோம். நெகிழ்வுதன்மை மிகவும் முக்கியம். அந்த பகுதியை சேர்ந்த துணை நடிகர்களை தேர்வு செய்தால் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும்.

திரைப்படத்தில் கருத்து சொல்ல வேண்டுமா?
திரைப்பட இயக்குநர் எந்த பிரச்சனைக்கும் தீர்வை சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் அரசியல்வாதியும் அல்ல. கணித மேதையும் அல்ல. விஞ்ஞானியும் அல்ல. அவர் கலைஞர். தான் வாழ்ந்த உலகில் கண்டதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார். இதன் மூலம் கோபம், வலி, மகிழ்ச்சி அனைத்தும் வெளிப்படும்.

எனக்குதான் எல்லாம் தெரியும் என நினைத்தேன்
சினிமா இயக்குநர்கள் பிடிவாதமாக இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், "நான் மாணவராக இருக்கும்போது உலகில் உள்ள எந்த இயக்குநருக்கும் படம் எடுக்கத் தெரியாது? சினிமா உலகம் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறது? என்று நினைத்தேன். அந்த தன்னம்பிக்கையுடனே மாணவர்கள் திரைப்படம் எடுக்கின்றனர். இயக்குநரான பிறகு எப்படி தாக்குப்பிடிப்பது என்பதை கற்றுக்கொள்வோம். சில நேரம் நமக்கு பிடித்ததை போல் இருப்போம். சில நேரம் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் இருப்போம்.

ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துகிறார்கள்
நடுநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன், "தற்போது வெளியாகும் திரைப்படங்கள் பிரச்சனைகள், பிளவுகள், ஒடுக்கப்படும் மக்கள் குறித்து பேசுகின்றன. ஒவ்வொரு தலைமுறையும், ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான பிரச்சனைகள் உள்ளன. அது ஒரு தனிநபர் சிந்தனையை பொறுத்தது. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்தப் படுகிறோம்.

நடுநிலையும் வலதுசாரிதான்
இன்றைய உலகம் பிளவுபடுத்தப்பட்டு உள்ளது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையாது. மய்யம் என்று சொல்பவரும் வலதுசாரிதான். ஆனால் அதை தேர்வு செய்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உலகில் நடப்பதைதான் நாம் திரைப்படங்களில் காட்ட முடியும். ஒருவேளை இந்த ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறினால் வித்தியாசமான படங்கள் வரலாம்." என்றார்












Click it and Unblock the Notifications