நீங்களும் ஆகலாம் ‘ஒரு நாள் கைதி’.. கம்பி எண்ண ரூ. 500 தான்... திகில் ஆஃபர் தரும் தெலுங்கானா!
ஹைதராபாத்: தெலுங்கானாவில், "சிறைச்சாலை அனுபவத்தை உணர்வோம்' என்ற புதிய சுற்றுலாத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அங்குள்ள 220 ஆண்டுகள் பழைமையான சங்கரெட்டி மத்தியச் சிறைச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் முழுவதும் தங்கிச் செல்ல ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாமியார் வீடு, கம்பி எண்ணுவது என சிறை வாழ்க்கையைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. கம்பி போட்ட கதவுகளுக்குப் பின் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என சிந்தித்துப் பார்ப்பவர்கள் ஏராளம்.
அதற்காக தவறு செய்து தான் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்கில்லை. அதற்கும் வித்தியாசமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது தெலுங்கானா.
சங்கரெட்டி சிறை...
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ளது 220 ஆண்டுகள் பழமையான சங்கரெட்டி மத்திய சிறைச்சாலை. ஹைதராபாதில் நிஜாம் ஆட்சியின் கீழ் தலைமை அமைச்சராக இருந்த முதலாவது சாலார் ஜங் என்பவரால், கடந்த 1796-ஆம் ஆண்டு, சங்கரெட்டியில் இந்த மத்தியச் சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்தச் சிறைச்சாலைக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 1 ஏக்கர் முழுவதும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம்...
கடந்த 2012ம் ஆண்டு இந்த சிறைச்சாலை அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதுமையான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கைதி...
அதாவது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைவாசம் என்றால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தைத் தர அம்மாநிலச் சிறைத் துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்படி, ரூ. 500 செலுத்தினால், ஒரு நாள் முழுவதும் இங்கு தங்கி சிறைவாசத்தை அனுபவிக்கலாம்.
கைதி டிரஸ்...
அவ்வாறு தங்க விரும்புபவர்களுக்கு கதர் ஆடை, அலுமினியத் தட்டு, டம்ளர், சோப் என கைதிகளுக்கு அளிக்கப்படும். அத்துடன், மின்விசிறி, சாப்பாடு, தேநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும். சிறைச்சாலையில் தங்கும் நபர்கள் கைதிகள் போல் வேலை செய்ய தேவையில்லை. ஆனால், தாங்கள் தங்குமிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஒரு மரக்கன்றையும் நடவேண்டுமாம்.
பயணிகளுக்கு ஆர்வமில்லை...
இதுகுறித்து அந்த மாநில சிறைத் துறை துணைக் கண்காணிப்பாளர் லஷ்மி நரசிம்மா கூறுகையில், "சங்கரெட்டி சிறையில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இதுவரை இத்திட்டதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிறையில் தங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும்" என்றார்.