உ.பியில், முஸ்லிம்கள் பேரணியின்போது பால்கனி இடிந்து விபத்து.. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்
உத்தரப் பிரதேசத்தில் ஷியா இஸ்லாமியர்கள் நடத்திய செகல்லம் என்னும் பேரணியின்போது ஒரு கட்டடத்தின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் அதில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷியா பிரிவு, இஸ்லாமியர்கள் நடத்திய செகல்லம் பேரணியின் போது அங்கிருந்த கட்டடம் ஒன்றின் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். அதில் படுகாயம் அடைந்த 24 பேரில் 4 பேரின் உடல் மிக மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலி என்ற நகருக்கு அருகே புதன்கிழமை ஷியா இஸ்லாமியர்கள் செகல்லம் என்னும் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி அசுரா தினத்திற்கு பின் ஷியா இஸ்லாமியர்களால் 40 நாட்கள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் பேரணி பைராம்நகர் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடத்தப்பட்டது. அதில் திரளான மக்கள் பங்கேற்றனர். அப்போது அங்குள்ள கட்டடம் ஒன்றின் மீது அமர்ந்திருந்து ஏராளமானோர் அந்தப் பேரணியைக் கண்டு ரசித்தனர்.
அப்போது அந்தக் கட்டடத்தின் பால்கனி பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரணி முகமது அலியின் பேரன் உசைன் அலியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பின்பற்றப்படுகிறது.