திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மதிமுக, வி.சி., த.வா.க.வினர் கைது!
திருப்பதி : திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக திருப்பதி வந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. திருப்பதிக்கு நேற்று மாலை வந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் கறுப்புக் கொடி காட்டினர். இந்த போராட்டத்தின் போது போலீசார் தாக்குதல் நடத்தியதில் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீலவானத்து நிலவன், வித்யாதரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் பாலமுருகன், சுந்தர், சத்திரம் குமார், திருவண்ணாமலை சிவா உள்ளிட்ட கறுப்புக் கொடி காட்டிய பலரையும் மிகக் கடுமையாக தாக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவங்களால் திருப்பதி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.