ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடைசி நேரத்தில் மனு...அவசரமாக விசாரிக்க கோரிக்கை
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் அதே மாதம் 19-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழக குழு டெல்லி சென்று மத்திய அரசுடன் பேசி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசரம் கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.