ஜெ.வைப் பார்த்ததும் "ஸ்டன்" ஆகி நெகிழ்ந்து நின்ற தமிழக சிறை அதிகாரிகள்.. பெங்களூர் சிறையில்!
பெங்களூர்: தமிழக சிறை அதிகாரிகள் சிலர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்த்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அவர்கள் ஜெயலலிதாவைப் பார்த்ததும் பேச முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் அமைதியாக நின்று விட்டனராம். ஜெயலலிதாதான் முதலில் பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம்.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை யாரையும் பார்க்கவில்லை. அவரை அவரது செல்லில் சசிகலாவும், இளவரசியும் உடன் இருந்து பார்த்துக் கொள்வதாக சிறை டிஐஜி ஜெய்சிம்மா கூறியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யாரையும் தன்னைப் பார்க்க அனுமதிக்காமல் உள்ளார் ஜெயலலிதா. இந்த நிலையில் தமிழக சிறை அதிகாரிகள் குழு பெங்களூர் சிறைக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்து வந்துள்ளது. அப்படியே ஜெயலலிதாவையும் பார்த்து வந்துள்ளனர்.
ஜெயலலிதாவைப் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்
ஜெயலலிதாவைப் அதிகாரிகள் குழு பார்த்தபோது எதுவும் பேசாமல் உணர்ச்சி வசப்பட்டு அப்படியே நின்று விட்டனராம் அதிகாரிகள்.
மெளனம் கலைத்த ஜெயலலிதா
அந்த இடமே சிறிது நேரம் இறுக்கமாக காணப்பட்டதாம். ஜெயலலிதாதான் முதலில் பேசி அதிகாரிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தாராம்.
போராட்டத்தைக் கைவிட கோரிக்கை
அதிகாரிகளிடம் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் தனக்கு ஆதரவாக நடந்துவரும் அனைத்துப் போராட்டங்களையும் கைவிடுமாறு தான் கூறியதாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டாராம்.
அதிகாரிகளுடன் தமிழக குழு ஆலோசனை
அதன் பின்னர் பெங்களூர் சிறை அதிகாரிகளுடன், தமிழக குழுவினர் பேசி ஜெயலலிதாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனராம்.
சித்தராமையாவின் உத்தரவு
இதற்கிடையே, சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கவனமாக உள்ளாராம்.
கைதிகளுக்குத் தடை
மேலும் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே கைதிகள் நடமாடவும் அவர் தடை விதித்துள்ளதாக சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.