இந்தியாவிலேயே முதன்முறையாக மூச்சுக்குழல் மாற்று ஆபரேஷன்... கேரள டாக்டர்கள் சாதனை
கொச்சி: இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள மருத்துவர்கள் மூச்சுக்குழாய் மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சிப் பகுதியைச் சேர்த 43 வயது பெண் ஒருவர் மூச்சுக்குழலில் கட்டி காரணமாக சிகிச்சைக்காக அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் அப்பெண்ணிற்கு அடினாய்டு சிஸ்டிக் கார்சினோமா பாதிப்பு இருப்பதும், மூச்சுக்குழலை மாற்றுவது மட்டுமே ஒரே வழி என்றும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த தாமஸ் என்ற 37 வயது ஆணின் மூச்சுக்குழல் அப்பெண்ணிற்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். உலக அளவில் இது 2வது அறுவைச் சிகிச்சையாக கருதப்படுகிறது.
இந்த அறுவைச் சிகிச்சையானது பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் சுப்ரமண்ய ஐயர் மற்றும் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் அருண் நாயர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டு பெல்ஜியத்தில் டாக்டர் பியர்ரி டிலிரெ தலைமையிலான குழு முதல் மூச்சுக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சையை செய்தது. அதன் பிறகு இப்போதுதான் அது கேரளாவில் நடந்துள்ளது.