வங்கிகள் 2 நாள் வேலை நிறுத்தம்: நாட்டுக்கு ரூ.30,000 கோடி இழப்பு
டெல்லி: நாடு முழுவதும் நடந்த 2 நாள் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் அரசுக்கும், வங்கிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள உயர்வு, வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 26 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 6 வெளிநாட்டு வங்கிகள், 52 கிராமிய வங்கிகள், மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் பணியாற்றும் 8.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் காரணமாக நாடுமுழுவதும் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காசோலைகள் பரிமாற்றம், ஏ.டி.எம். சேவைகள் முடங்கின. மின்கட்டணம், டெலிபோன் கட்டணம் செலுத்த முடியாமலும், பணம் எடுக்க முடியாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.
ரூ.30000 கோடி இழப்பு
இரண்டுநாள் போராட்டத்தினால் அரசுக்கும், வங்கிகளுக்கும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் கோடி மதிப்புள்ள 10 கோடி செக்குகள் தேங்கி கிடக்கிறது.
வர்த்தகர்கள் பாதிப்பு
அரசு பண பரிமாற்றம், வெளிநாட்டு பண பரிமாற்றம், பணபரிமாற்ற வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
காசோலைகள் முடக்கம்
நாடு முழுவதும் 30 ஆயிரம் ஏ.டி.எம்.க்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் 7,500 ஏ.டி.எம்.க்கள் செயல்படவில்லை.தமிழ்நாட்டில் சுமார் ரூ.1.5 ஆயிரம் கோடி கோடி காசோலைகள் பண பரிவர்த்தனை முடங்கியது.
நெல்லை மாவட்டத்தில்
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 226 வங்கிகளை சேர்ந்த 4 ஆயிரம் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வங்கிகள் இயங்கவில்லை. பல ஏடிஎம்களில் சுத்தமாக பணம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
லாபத்தை கேட்கவில்லை
வங்கி துறையில் வரும் லாபத்தை நாங்கள் சம்பளமாக கேட்கவில்லை. லாபத்தில் மிக குறைவான சதவிகிதத்தையே சம்பளமாக கேட்கிறோம் என்று வங்கி ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வராக்கடன் ரூ.1.83 லட்சம் கோடி உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளர். அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடனை திருப்பி அளிக்காதவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். இன்று வழக்கம்போல் வங்கிகள் செயல்படும் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications