மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம். சித்தேஸ்வரா திடீர் ராஜினாமா !
டெல்லி: மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் கனரகத் தொழில் துறை இணை அமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்தனர்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2வது முறையாக ஜூலை 5 ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் கனரகத் தொழில் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த ஜி.எம்.சித்தேஸ்வராவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் இருவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்விக்கு சிறுபான்மை நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனரகத் தொழில் துறை இணை அமைச்சராக பாபுல் சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.