அனல் பறக்கும் வாரணாசி... 8 தொகுதிகளில் பிரதமர் மோடி, மமதா, அகிலேஷ், பிரியங்கா பிரசாரம்
வாரணாசி: வாரணாசி லோக்சபா தொகுதிக்குப்பட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசிக்குட்பட்ட 8 தொகுதிகளில் மார்ச் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 8 தொகுதிகளில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 6-லும் அதன் கூட்டணி கட்சிகள் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டன.
உ.பி.யில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாரணாசி லோக்சபா தொகுதியில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
மோடி பிரசாரம்
வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 20,000 பாஜக வாக்கு சாவடி முகவர்களுடன் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். அடுத்த வாரம் வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி 3 நாட்கள் தொடர் பிரசாரம் செய்ய உள்ளார். பாஜகவைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் செல்வாக்கு, வாரணாசி பகுதியில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறது.
மமதா-அகிலேஷ்-பிரியங்கா
இதேபோல் பாஜகவுக்கு பதிலடி தர மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் அடுத்த வாரம் அங்கு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். வாரணாசியில் மமதாவும் அகிலேஷ் யாதவும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அதேநாளில்தான் பிரதமர் மோடியும் வாரணாசி வருகை தர உள்ளார். பிரியங்கா காந்தியும் வாரணாசியில் அன்றைய நாளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
பாஜக ஆதரவு
தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து பேசும் வாரணாசி வாக்காளர்கள், பிரதமர் மோடி- முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரும் இணைந்து வாரணாசியை மேம்படுத்தி உள்ளனர். பாஜக ஆட்சியில் எந்தவித அச்சமும் இல்லாமல் இரவில் நடமாட முடிகிறது. இதுவரையில் வாரணாசியை மோடி- யோகி போல் மேம்படுத்தியதும் இல்லை. அதனால் எங்கள் வாக்குகள் பாஜகவுக்குதான் என்கின்றனர்.
அனல் பறக்கும் களம்
வாரணாசி தெற்கு தொகுதியில் அமைச்சர் நீல்கந்த் திவாரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி, காமேஸ்வர்நாத் தீட்சித்தை நிறுத்தியுள்ளது. இருவருமே பிராமண சமூகத்தினர். இதனால் பிராமணர்களுக்கு இடையே இங்கே கடும் போட்டி நிலவுகிறது. சிவ்பூர் தொகுதியில் அமைச்சர் அனில் ராஜ்பார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் மகன் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் வாரணாசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் தேர்தல் களை கட்டியுள்ளது.