வர்தா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு நிவாரணம் வழங்க மோடியிடம் வைகோ வலியுறுத்தல்
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
டெல்லி: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி வர்தா புயல் கரையை கடந்தது. இதனால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. சென்னை, அதன் புறநகரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்னமும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மின் இணைப்பு சரி செய்யப்படாததால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காமல் அல்லல் பட்டு வருகின்றனர். மேலும், மின்சாரம்,இணைய வசதி உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளும் முடங்கியுள்ளன. ஏற்கனவே, ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மக்களுக்கு தற்போது மின்சாரம், இணைய வசதி இல்லாததால் கூடுதல் சிரமங்களை சந்திக்கும் அவலம் எழுந்துள்ளது.
இந்நிலையில்,பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், வரும் பொங்கல் திருநாளின் போது ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.