நோ சொன்ன இங்கிலாந்து... ‘ரெட் கார்னர்’ நூலைக் கட்டி ம(ல்)லையை இழுக்க இந்தியா திட்டம்
டெல்லி: விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என்று இங்கிலாந்து கூறி விட்டதால் அவரை நாடு கடத்திக் கொண்டு வரும் மிகப் பெரிய சட்டப் போராட்டத்தில் இந்தியா இறங்கவுள்ளது.
முதல் கட்டமாக மல்லையாவுக்கு எதிராக சிபிஐ மூலமாக ரெட் கார்னர் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையில் மத்திய அமலாக்கப் பிரிவு இறங்கவுள்ளது.
முன்னதாக பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளதற்காக மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா கூறுவதை ஏற்க முடியாது என்று இங்கிலாந்து கூறி விட்டது.
நோ சொன்ன இங்கிலாந்து...
பாஸ்போர்ட் முடக்கிவைக்கப்பட்டுள்ள ஒரே காரணத்திற்காக யாரையும் நாடு கடத்த முடியாது என்று இங்கிலாந்து சட்டம் கூறுகிறது. அதேசமயம், மல்லையா விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவிகளைச் செய்ய இங்கிலாந்து தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளளது
ரெட் கார்னர்...
இருப்பினும் மல்லையாவை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளில் இந்தியா தீவிரமாக இறங்கவுள்ளது. முதல் கட்டமாக மத்திய அமலாக்கப் பிரிவு, சதிபிஐ மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸைப் பிறப்பிக்க முயலும்.
சிபிஐ நடவடிக்கை...
இதுவரை 3 சம்மன்களை சிபிஐ அனுப்பியுள்ளது. ஆனால் அதை ஏற்று மல்லையா ஆஜராகவில்லை. எனவே அதைக் காரணம் காட்டி ரெட் கார்னர் எச்சரிக்கையை விட சிபிஐயை அமலாக்கப் பிரிவு வலியுறுத்தும்.
இன்டர்போல்...
சிபிஐ ரெட்கார்னர் எச்சரிக்கையை விடுத்தால், இன்டர்போல் மூலமாக இது சர்வதேச அளவில் அமலுக்கு வந்து விடும். இன்டர்போலும் ஒரு ரெட் கார்னர் நோட்டீஸைப் பிறப்பிக்கும். இதை அனைத்து நாடுகளும் ஏற்றாக வேணடும். இந்த ரெட் கார்னர் உத்தரவுபடி மல்லையா கைது செய்ப்பட்டால் அவரை நாடு கடத்திக் கொண்டு வருவது எளிதாகும்.
தாமதம் ஆகலாம்...
ஆனால் இத்தனை காரியமும் எளிதானதல்ல என்று சிபிஐ தரப்பில் கூறுகிறார்கள். என்னதான் ரெட் கார்னர் எச்சரிக்கை விட்டலும்கூட இங்கிலாந்து அரசு எடுத்த எடுப்பிலேயே மல்லையாவைக் கைது செய்யாது. எனவே அதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எளிதானதல்ல...
மேலும் தனது நாடு கடத்தலை எதிர்த்து உள்ளூர் கோர்ட்டில் மல்லையாவும், வழக்குப் போட வாய்ப்புள்ளது. எனவே அது சிலவருடம் வரை கூட இழுத்தடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே மல்லையாவை நாடு கடத்திக் கொண்டு வருவது என்பது நூலை வைத்து மலையை இழுக்கும் சமாச்சாரம் போல என்பது குறிப்பிடத்தக்கது.