தேமுதிக மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி: 2ம் தேதி கூட்டணியை அறிவிக்கிறார் விஜயகாந்த்
திருப்பதி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து உளுந்தூர்பேட்டை மாநாட்டில் நிச்சயம் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது 25வது திருமண நாளையொட்டி, விஜயகாந்த், பிரேமலதா அவரது குடும்பத்தினருடன் திருப்பதியில் இன்று அதிகாலையில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் நாளை மறுநாள் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டின் முடிவில், தொண்டர்களின் கருத்துகளை முழுமையாக அறிந்து, தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவை வெளியிடப்படும் என்றார்.
மாநாட்டிற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
அடுத்த திட்டம் என்ன?
எனினும் கூட்டணி விஷயத்தில், விஜயகாந்தின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவைத் தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.கவும், தூது மேல் தூது விட்டு வருகின்றன. ஆனாலும், எதற்கும் பிடிகொடுக்காமல் விஜயகாந்த் நழுவி வருகிறார்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், நாளை மறுதினம் நடக்கவுள்ள, தே.மு.தி.க., மாநில மாநாட்டில், கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்டு, முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.
பாஜக கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறலாம் என்ற கருத்து, பரவலாக எழுந்துள்ளது. 'தே.மு.தி.க., மாநாட்டிற்கு, 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளதால், தங்களுடன் விஜயகாந்த், கூட்டணி அமைப்பது உறுதி' என, பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுபற்றி, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, சேலத்தில், தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அப்போது, கட்சியினரிடம் கூட்டணி பற்றி, விஜயகாந்த் கருத்து கேட்டார். தே.மு.தி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாக கையை உயர்த்தினர். இதையடுத்து, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், உளுந்தூர் பேட்டை மாநாட்டில், இரு கட்சிகளின் பெயரை கூறி, அதில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என, விஜயகாந்த் கருத்து கேட்பார். தொண்டர்கள், கையை உயர்த்தி கருத்து தெரிவித்தாலும், மாநாட்டிலேயே விஜயகாந்த், தன் முடிவை அறிவிக்க மாட்டார். சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, முடிவை அறிவிப்பார். இவ்வாறு, தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.