மாயாவதி, ஜெயாபச்சன் உள்பட 58 எம்பிகள் பதவிக்காலம் முடிகிறது... மார்ச் 23ல் தேர்தல் அறிவிப்பு!
ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடியும் 58 இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடியும் 58 இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 மாநிலங்களைச் சேர்ந்த 58 ராஜ்யசபா எம்பிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு மார்ச் 23ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு மார்ச் 12 கடைசி நாளாகும்.
ஏப்ரல் 2018 உடன் 58 எம்பிகளின் பதவிக்காலம் முடிகிறது. அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சமாஜ்வாதி கட்சியின் கிரன்மோய் நந்தா, தர்ஷன் சிங், நரேஷ் அகர்வால், ஜெயாபச்சன், பாஜகவின் வினய் கடியார், காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி உள்ளிட்டோர் பதவிக்காலம் முடியும் உத்திரபிரதேச மாநில எம்பிகள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியின் பதவிக்காலமும் 2018ம் ஆண்டுடன் முடிகிறது. மாயாவதி ஜூலை மாதமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதிக்காததை கண்டித்து மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மேலும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது.
உத்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார், மராட்டிய மாநிலத்தில் இருந்து தலா 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்குவங்கம், மத்தியபிரதேசத்தில் தலா 5 பேரும், கர்நாடகா, குஜராத்தில் இருந்து தலா 4 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.