காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்: அதிமுக எம்பிக்கள் அதிரடி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என அதிமுக எம்பிக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என அதிமுக எம்பிக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் இன்று இரண்டாம் நாளாக போராட்டம் நடத்தினர். அதிமுக எம்பிக்களுடன் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதைத்தொடர்ந்து தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
நடத்தவிட மாட்டோம்
அப்போது பேசிய அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்.
எந்த ஆட்சேபமும் இல்லை
காவிரி விவகாரத்தில் எங்களுடன் மற்ற கட்சிகள் இணைந்து போராடுவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. உணர்வின் அடிப்படையில் அதிமுக, திமுக எம்பிக்கள் இணைந்து காவிரி விவகாரத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவின் கொள்கை
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. இவ்வாறு தம்பிதுரை கூறினார்.
அலுவல் பணிகள் பாதிப்பு
இதனிடையே அதிமுக எம்பிக்களின் அமளியால் இரண்டாவது நாளாக ராஜ்ய சபா ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராஜ்ய சபா அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.