'மோடி கேர்' மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து மே.வங்கம் விலகல்- தமிழக அரசு என்ன செய்யும்?
மோடி கேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து மேற்கு வங்கம் விலகிவிட்டது.
Recommended Video
கொல்கத்தா: மத்திய அரசு அறிவித்துள்ள மோடி கேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் எங்களுக்கு தேவை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அமலில் உள்ள தமிழக அரசும் என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
ஆனால் இத்தகைய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. இது திராவிட கட்சிகளைப் பார்த்து ஈயடிச்சான் காப்பி திட்டம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் மோடி கேர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்கப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மாநிலத்தில் இருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களே மக்களுக்கு போதுமானது எனவும் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
தமிழகத்திலும் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மத்திய அரசின் திட்டத்தை ஏற்று நடைமுறையில் உள்ள காப்பீட்டு முறைகளை அரசு கைவிடுமா? அல்லது மேற்கு வங்கம் பாணியில் மத்திய அரசின் திட்டமே தேவை இல்லை என அறிவிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.