மகாபலியை மட்டம் தட்டி மலையாளிகளிடம் சிக்கியதை மறந்த மோடி.. 'தமிழ்' ராவணனை இப்படி பேசலாமா பிரதமர்?
ராவணனை தீவிரவாதி என சித்தரித்துள்ளதன் மூலம், சில சாராரின் ஒற்றை கொள்கைக்குள் தமிழக இந்துக்களின் அல்லது ராவணனன் மீது மதிப்பு கொண்ட தமிழர்கள் நம்பிக்கையை திணிக்க மோடி முற்பட்டுள்ளார்.
டெல்லி: ராவணனை, தீவிரவாதி என ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வீட்டில் நேற்று மாலை கன்னட-தெலுங்கு புத்தாண்டான யுகாதி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அம்மொழி பேசும் திரளான மக்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த உரையின்போது வித்தியாசமாக பேசுவதாக நினைத்து, தமிழகத்தில் நிலவும் நம்பிக்கைக்கு மாற்றாக ஒரு கருத்தை முன்வைத்து சர்ச்சைக்கு காரண கர்த்தாவாகியுள்ளார் பிரதமர் மோடி.
ஜடாயு
மோடி பேசுகையில், ராமாயண இதிகாசத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை அவர் நினைவுபடுத்தி பேசினார். ராமபிரான் மனைவி சீதாவை, ராவணன் கவர்ந்து புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு கடத்திச் செல்லும்போது, ஜடாயு என்ற கழுகு ராவணனை வழி மறித்து சண்டையிடும் காட்சியை அவர் நினைவுபடுத்தினார்.
தீவிரவாத போர்
ஜடாயு ஒரு அப்பாவி பெண்ணை காப்பாற்ற போர் புரிந்து மடிந்து போனார். தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட முதலாவது சண்டை இதுவாகத்தான் இருக்கும் என ஜடாயுவை புகழ்ந்துரைத்தார் மோடி. வயது முதிர்வு காரணமாக விரைவிலேயே பலம் பொருந்திய ராவணனிடம் வீழ்ந்துவிடுவார் ஜடாயு. ராமரும், அவரின் தம்பி லட்சுமணரும் சீதாவை தேடி வருகையில், உயிருக்கு போராடியபடி இருந்த ஜடாயு, ராமரிடம் நடந்த விவரங்களை கூறி, சீதாவை தெற்கு திசை நோக்கி கடத்தி செல்வதை கூறிவிட்டு உயிர் நீப்பார்.
ராவணனை தீவிரவாதியாக சித்தரிப்பு
முதன்முதலாக தீவிரவாதத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது இந்தியாவில்தான் என்ற கோணத்தில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, ராவணனை தீவிரவாதி என சித்தரித்து பேசிவிட்டார் மோடி. ராவணன் குறித்த கருத்து அபிப்ராய பேதங்கள் தமிழகத்தில் நிலவுவதை மோடி கருத்தில் கொள்ளாதது, தமிழகத்தில் ராணவன் மீதான மாற்றுக்கருத்து கொண்டோரிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இருவேறு பார்வைகள்
ராவணனை இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று கூறுவது திராவிடர் கழகம் உள்ளிட்ட சில இயக்க சிந்தனை கொண்டவர்களின் பார்வை. அதேநேரம் ராவணன், பிறர் மனைவியை கவர்ந்து சென்ற மோசமான நபர் என்பது இதிகாச அடிப்படையிலான பார்வை. இவ்விரு பார்வைகளுக்கும் மதிப்பு கொடுத்து தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிகளுமே ராவணனை தாழ்ந்துரைப்பது இல்லை.
மகிஷனுக்கும் மதிப்பு
திடீரென தற்போது மோடி இவ்வாறு கூறியிருப்பதுதான் சர்ச்சைக்கு காரணம். இந்தியா ஒரு பரந்துபட்ட மாநிலங்களின் தொகுப்பு தேசம். இங்கு மாநிலங்களுக்கென்றே சில தனிப்பட்ட நம்பிக்கைகள், கலாசாரங்கள் உள்ளன. மகிஷனை அரக்கன் என கருதி அவனை வதம் செய்த துர்க்கையை கொண்டாடுவது தமிழகத்தின் காளி வழிபாட்டு நம்பிக்கை. மேற்கு வங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களும் இதே நம்பிக்கை கொண்டுள்ளன. அதேநேரம், மகிஷனை வழிபடும் பீகாரின் சில பிரிவு மக்களின் நம்பிக்கையையும் பிறர் கொச்சைப்படுத்துவது இல்லை.
கேரளாவில் கொந்தளிப்பு
மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வதம் செய்ததை தமிழக மக்களை போலவே கேரள மக்களும் நம்பினாலும், அவர்கள் மகாபலி சக்கரவர்த்தியை மதிப்புக்குரியவராகவே பார்க்கிறார்கள். ஓணம் பண்டிகையை அவர்கள் மகாபலி சக்க்ரவர்த்திக்கு அளிக்கும் மரியாதைக்குரிய விழாவாக கருதுகிறார்கள். ஓணம் பண்டிகையை, வாமன ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடலாமே என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு, மொத்த கேரளமும் பொங்கி எழுந்தது. எங்கள் நம்பிக்கை அப்படியேத்தான் இருக்கும் என்றது.
ஒற்றை கலாசாரத்தின் ஊடுருவல்
இந்து மதம் போன்ற ஒரு தொகை மதத்தில் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். ஒற்றை கொள்கை வரையறைக்குள் இந்து மதத்தை அடக்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனால் இதுவரை இல்லாமல், ராவணனை தீவிரவாதி என சித்தரித்துள்ளதன் மூலம், சில சாராரின் ஒற்றை கொள்கைக்குள் தமிழக இந்துக்களின் அல்லது ராவணனன் மீது மதிப்பு கொண்ட தமிழர்கள் நம்பிக்கையை திணிக்க மோடி முற்பட்டுள்ளார் என்பதே உண்மை. இந்த கலாசார சூறையாடல்கள் தொடர்ந்தால் நாட்டில் வீண் கொந்தளிப்புகளே மிஞ்சும் என்பதை மோடி அறியாதவரில்லை.