நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தேறுவது யார்.... கணக்கு என்ன சொல்கிறது!
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கான ஆதரவு அந்தக் கூட்டணிக்கு உள்ளது.
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்க பாஜக ஒருபுறம் முயற்சி மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் யாரை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். இதில் காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு அதிக பலம் உள்ளது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதன்படி பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை.
பாஜக 104 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வென்றுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன்படி, இவ்விரு கட்சிகளுக்கு மொத்தமாக 116 பேரின் ஆதரவு உள்ளது. மேலும் 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்துள்ளனர். அதன்படி 118 பேரின் ஆதரவு உள்ளது.
மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளார். அதனால், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், காங்கிரஸ், மஜத மற்றும் சுயேச்சைகள் என அந்த கூட்டணிக்கு 117 பேரின் ஓட்டு கிடைக்கும். இது பெரும்பான்மையைவிட அதிகமாகும்.
அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கே அதிக பலம் உள்ளது.