மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
மக்களவை தேர்தல் இப்போது நடந்தால் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து புதிய சர்வே வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் இப்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தகவல்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே-இல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும், இரண்டாவது முறையாகப் பிரதமராக இருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பு இந்தாண்டு பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பல மாநிலங்களில் இப்போது பாஜகவே ஆட்சியில் உள்ளது. எனவே, அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கு இணையாக இந்த சட்டசபைத் தேர்தல்களுக்கும் பாஜக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

புதிய சர்வே
இதனிடையே தற்போது பிரதமர் மோடிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது.. பாஜக அரசின் சாதனை உள்ளிட்டவை குறித்து பிரபல ஆங்கில ஊடகமான இந்திய டுடே சி வோட்டர்ஸ் உடன் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாடு முழுக்க இருக்கும் மக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக மீது மக்களுக்கு என்ன மாதிரியான இமேஜ் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

அடித்து நொறுக்கும் பாஜக
இந்த சர்வே-இல் இப்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களில் வெல்லும் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 543 இடங்களில் பாஜக 284 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களவையில் ஒரு கட்சி பெரும்பான்மையை அடைய 272 இடங்களில் வென்றிருக்க வேண்டும். அதைக் காட்டிலும் கூடுதலாக 12 இடங்களில் பாஜக வெல்ல வாய்ப்புள்ளதாக இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

காங். நிலை என்ன
அதேபோல மக்களவை தேர்தல் இப்போது நடத்தப்பட்டால் காங்கிரஸ் கட்சி 191 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது அத்தனை இடங்களிலும் இரு கட்சிகள் மட்டுமே நின்றால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும். ஆனால், தேர்தல் சமயத்தில் இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசின் சாதனைகள்
இதில் மோடி அரசின் சாதனைகள் குறித்தும் கேட்கப்பட்டு இருந்தது. அதிகரிக்கும் பணவீக்கம், கொரோனா பெருந்தொற்று, சீனாவின் அச்சுறுத்தல்கள் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளாகப் பெரிய தலைவலியாக இருந்த போதும், நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுக்க இருக்கும் 1.40 லட்சம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
சுமார் 20% மக்கள் கொரோனாவை வெற்றிகரமாகச் சமாளித்ததே பாஜக அரசின் மிகப் பெரிய சாதனை என்று குறிப்பிட்டுள்ளனர். அதேபோல 14% பேர் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கத்தைப் பெரிய சாதனையாகக் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர சுமார் 12% பேர் உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயிலைக் கட்டியது பாஜக அரசின் பெரிய சாதனையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தோல்வி என்ன
அதேபோல அரசின் மிகப் பெரிய தோல்வியாக எதைக் கருதுவீர்கள் என்ற கேள்விக்கு 25% பேர் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறியதே பாஜக அரசின் மிகப் பெரிய தோல்வி என்று குறிப்பிட்டுள்ளனர். சுமார் 17% பேர் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்சினை என்று சொல்லியுள்ளனர். மேலும், 8% பேர் அரசு கொரோனா பெருந்தொற்றை சரியாகக் கையாளவில்லை என்றும் அதுவே அரசின் பெரிய தோல்வி என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications