பாக்.குக்கு ஆயுதம் தந்துவிட்டு இந்தியா வரும் புடின்.. சிரித்தபடி வரவேற்கத் தயாராகும் மோடி!
டெல்லி: பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை போட்டு முடித்த கையோடு இந்தியாவுக்கு வருகிறார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் கூட பாரம்பரிய நண்பரான ரஷ்யாவின் அதிபரை முறைப்படி, தோழமையுடன் வரவேற்க இந்தியா தயாராகி வருகிறது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்தார். இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் ஜின்பிங் இந்தியா வந்தார். இருப்பினும் மோடி அவரை நல்லபடியாக கவனித்து அனுப்பினார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
சமீபத்தில்தான், இந்தியாவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கி ஷோய்கு கடந்த மாதம் இஸ்லாமாபாத் சென்று பாகிஸ்தானுடன், ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற முதல் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஷோய்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் மட்டுமே ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தானுடன் அது பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போட்டிருப்பது இந்தியாவை அதிர வைத்துள்ளது.
இருப்பினும் இது புதிதல்ல. ஏற்கனவே, பர்வேஸ் முஷாரப் அதிபராக இருக்கையிலேயே பாகிஸ்தான், ரஷ்யா இடையேயான ராணுவ ஆயுத பரிவர்த்தனைகள் தொடங்கி விட்டது. ரஷ்யா, பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்க உள்ளதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்தது. ஏற்கனவே பாகிஸ்தான் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்.ஐ.17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானுடன் தொடர்பு வைக்க ரஷ்யா விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் இந்தியா தனது ராணுவ தேவைக்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சமீப காலமாக அதிக அளவில் அணுகி வருவதால்தான் ரஷ்யா பாகிஸ்தானுடன் தொடர்பை வலுப்படுத்த ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த இந்திய ராணுவ ஒப்பந்தத்தில் தங்கள் நாட்டுக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை என்பதில் ரஷ்யாவுக்கு ஆத்திரம்.
மேலும் தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பது குறித்து இந்தியா-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இது கண்டிப்பாக இழுபறியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ரஷ்யா நமக்கு கோர்ஷ்கோவ் என்ற அணு சக்தியில் இயங்கக் கூடிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலை கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி, நாமும் உரிய பணத்தையும் அளித்தும் கூட மிக நீண்ட தாமதத்திற்குப் பிறகே அது நமக்கு வந்து சேர்ந்தது. பல ஆண்டு தாமதத்திற்குப் பின்னர் வந்து சேர்ந்த அந்தக் கப்பல்தான் பின்னர் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தத் தாமதம் காரணமாக கப்பலை சீரமைத்துக் கட்டும் செலவும் திட்டமிட்டதை விட பலமடங்கு அதிகரித்துப் போனது.
எனவே இந்த போர் விமானத் தயாரிப்பும் கூட இதேபோல இழுத்தடிக்கும் என்று இப்போதே உறுதியாக நம்பலாம்.
இப்படி பல குழப்பங்கள் இருக்கும் பின்னணியில்தான் புடின் இந்தியா் வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவர் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.