கோவையில் 'இறந்த' கணவர் பழனியில் உயிரோடு வந்தார்.. இன்ப அதிர்ச்சியில் மனைவி
கேரளா மாநிலத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட கணவர் உயிருடன் வந்ததால் அவரது மனைவி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இறந்ததாக கருதப்பட்ட கணவர் உயிருடன் வந்ததால் அவரது மனைவி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
கேரளா மாநிலம் கொல்லங்கோடு வடக்கதரையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (54). இவரது கணவர் கிருஷ்ணன் குட்டி (58). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கிருஷ்ணன்குட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவர் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டை விட்டுச் சென்ற சில நாட்களில் கோவை உக்கடத்தில் இருந்து போலீஸார் கேரளா சென்றனர். அங்கு ராஜேஸ்வரியை சந்தித்து சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் ஒருவர் கிருஷ்ண சந்திரன் என்கிறார். அது காணாமல் போன அவரது கணவர்தானா என்பதை பார்க்க வருமாறு அழைத்தனர்.

அடையாளம் தெரியவில்லை
போட்டோவில் இருந்தவர் தலைநிறைய முடியும் தாடியுமாக இருந்ததால் சரியாக அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவர் தனது கணவரில்லை என்றார் ராஜேஸ்வரி. அடுத்த சில நாட்களில் கிருஷ்ணசந்திரன் இறந்து போனார். இதையடுத்து மீண்டும் ராஜேஸ்வரியையும், அவரது உறவினர்களையும் அழைத்து நன்றாக அடையாளம் பார்க்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டார்கள்.

அடையாளம் பொருந்தியது
தன் கணவருக்கு கையில் ஒரு வெட்டுத்தழும்பு, முதுகில் ஒரு பெரிய மச்சம் இருக்கும் என்று ராஜேஸ்வரி கூறினார். அந்த உடலில் மருத்துவர்கள் சோதனை செய்த போது ராஜேஸ்வரி கூறிய அடையாளங்கள் இருந்தன. இதை வைத்து இறந்தது கிருஷ்ணன் குட்டிதான் என்று கருதி அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்து முடித்தனர்.

மன ஆறுதலுக்காக...
இந்நிலையில் மன ஆறுதலுக்காக ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் பழனிக்கு சென்றனர். அப்போது எதிரே வந்தார் ஒரு நபர். அவரை பார்த்த ராஜேஸ்வரி ஓடிசென்று கட்டித் தழுவி அழுதார். அதன் பின்னர்தான் அது கிருஷ்ணன்குட்டி என்பதும் அவர் உயிரிழக்கவில்லை என்ற விஷயமும் அனைவருக்கும் தெரியவந்தது.

கேரளாவுக்கு சென்றார்
இதைத் தொடர்ந்து மீண்டும் பழனி மலைக்கு சென்று சுவாமியை தரிசித்த ராஜேஸ்வரி உயிருடன் வந்த கணவருடன் கேரளாவுக்கு சென்றார். அவரை அங்கிருந்தவர்கள் வாழ்த்தி அனுப்பினர். இந்தநிலையில் புதைக்கப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தவறு எங்கே நடந்தது? என்பது குறித்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications