உஷார் மக்களே, உஷார்!: பெங்களூர் பன்னர்கட்டா பூங்காவில் 'ஃப்ரீயாக' சுற்றும் புலி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் தேசிய பூங்காவில் புலி ஒன்று சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் பன்னர்கட்டா உயிரியல் தேசிய பூங்கா உள்ளது. அங்கு புலிகள், யானைகள், சிங்கங்கள் என பல வகை மிருகங்கள் தனித் தனி வேலிப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வேலி இல்லாத பகுதிகளில் புலியின் கால் தடம் இருப்பது தெரிய வந்தது.
பூங்கா புலிகள் அதன் வேலியை விட்டு வெளியே வராத நிலையில் கால் தடம் மட்டும் தினமும் பல்வேறு இடங்களில் பதிவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பூங்காவின் வனப்பகுதியில் வேன் ஓட்டும் சதீஷ் என்பவர் காட்டில் சுற்றித் திரிந்த புலியை புகைப்படம் எடுத்தார். அதன் பிறகே புலி ஒன்று வேலியில் இல்லாமல் சுற்றுவது உறுதிபடுத்தப்பட்டது.
அந்த புலி காவிரி உயிரியல் காப்பகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் புலி தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்திருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புலியால் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.