திட்டக் கமிஷனை கலைப்பாரா மோடி?
டெல்லி: மத்திய திட்டக் கமிஷன் மீது நல்ல அபிப்பிராயம் எப்போதுமே பிரதமர் மோடிக்கு இருந்ததில்லை. எனவே அவர் திட்டக் கமிஷனை கலைத்து விடுவார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த திட்டமிக் கமிஷன். இதுதான் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கித் தரும் வேலையைச் செய்து வருகிறது.
ஆனால் இதில் அரசியல் புகுந்து சாதகமான மாநிலங்களுக்கு அதிக நிதியையும், பாதகமான மாநிலங்களுக்கு கஞ்சத்தனத்தைக் காட்டுவதாகவும் பல மாநிலங்களில் பல காலமாகவே புகார்கள் இருந்து வருகின்றன.
மோடிக்குப் பிடிக்கவே பிடிக்காது
குறிப்பாக மோடிக்கு திட்டக் கமிஷனை அறவே பிடிக்காது. கடந்த ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது திட்டக் கமிஷன் கூட்டத்துக்கு வந்த அவர் திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி அவர்களிடமே ஒரு வீடியோ படத்தைப் போட்டுக் காட்டி அதிர வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
கலைக்கப்படுமா..
தற்போது மோடி பிரதமராகியுள்ளார். எனவே அவர் திட்டக் கமிஷனின் அதிகாரங்களைப் பறிப்பார் அல்லது அதை முற்றிலுமாக கலைத்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நேரு போட்ட விதை
திட்டக் கமிஷன், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
வேறு அமைப்பு தேவை
கடந்த வாரம் மத்திய அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திட்டக் கமிஷனை கலைத்து விட்டு புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்..
உருப்படாத ஐந்தாண்டுத் திட்டங்கள்
ஐந்தாண்டுத் திட்டங்கள் என்ற பெயரில் திட்டக் கமிஷன் அறிவிக்கும் திட்டங்கள் பலவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற குமுறலும் உண்டு. எனவேதான் திட்டக் கமிஷனை மோடிக்கும் பிடிப்பதில்லை. பிரதமர் பதவியேற்ற பின்னர் கடந்த ஒரு மாதமாகவே திட்டக் கமிஷனை மோடி கண்டு கொள்ளவில்லை என்பதும் முக்கியமானது.
செயல் தலைவர் பதவி காலி
திட்டக் கமிஷனின் செயல் தலைவர் பதவி காலியாகவே உள்ளது. அதை நிரப்ப மோடி ஆர்வம் காட்டவில்லை.
பட்ஜெட் விவாதத்திற்கு அழைப்பில்லை
மேலும் முதல் முறையாக பட்ஜெட் குறித்த விவாதங்களுக்கு திட்டக் கமிஷன் அழைக்கப்படவில்லை.
எனவே, திட்டக் கமிஷனுக்கு விரைவிலேயே மூடு விழா காணப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.