பணம் கொடுக்கலன்னா ரசாயனப் பொடி வீசுவோம்...விப்ரோ நிறுவனத்துக்கு வித்தியாச மிரட்டல்
பிரபல ஐடி நிறுவனமான விப்ரோவிற்கு ஈமெயிலில் வித்தியாசமான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவிடம் இருந்து ரூ.500 கோடி கேட்டு மர்ம நபர் ஈமெயிலில் மிரட்டல் விடுத்துள்ளார்.
பெங்களூரில் இயங்கி வரும் விப்ரோ நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்ட மின்முகவரிக்கு ரூ.500 கோடியை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாம். 29 நாட்களுக்குள் இந்த பணத்தை அனுப்பாவிடில் கடுமையான நச்சுத்தன்மை கொண்ட மருந்துப் பொடி விப்ரோ வளாகத்தில் தெளிக்கப்படும் என்றும் அந்த மிரட்டல் மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாம்.
இது சாதாரண எச்சரிக்கையல்ல சில நாட்களில் முதல்கட்டமாக 2 கிராம் நச்சுத் தன்மை கொண்ட ரைசின் பொடி அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ந்து போன விப்ரோ நிறுவனம் மிரட்டல் மின்னஞ்சல் குறித்து பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் புகார் அடிப்டையில் குற்றவாளிகளை சைபர் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மிரட்டலால் விப்ரோ நிறுவனப் பணியில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.