ஆந்திராவின் சிங்கப்பூராக மாறப் போகும் "விவசாய" விஜயவாடா...!
ஹைதராபாத்: மலேசியா திடீரென ஒரு நாள் சிங்கப்பூரை நீ வேண்டாம் போ என்று துரத்தி விட்டது. அதிர்ந்து போய் நின்றார்கள் சிங்கப்பூர் மக்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றனர். அப்போது லீ க்வான் யூ சாலையில் இறங்கி நான் இருக்கிறேன்.. நம் உழைப்பு இருக்கிறது.. வாருங்கள் மலேசியாவே மலைத்துப் போகும் அளவுக்கு இமயம் போல உயர்ந்து காட்டுவோம் என்று அழைப்பு விடுத்ததோடு நிற்காமல் தானே இறங்கி சிங்கப்பூரை கட்டி எழுப்பி உலகம் போற்றும் அருமையான நகராக உருவாக்கிக் காட்டி சாதித்தார்.
கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் இன்று சீமாந்திரா இருக்கிறது. அத்தனை வசதிகளையும் கொண்ட ஹைதராபாத் அவர்களின் கையிலிருந்து இன்னும் 10 வருடங்களில் தெலுங்கானாவுக்குப் போய் விடும்.
பார்த்துப் பார்த்து உருவாக்கிய, வளர்த்து, ஆந்திராவின் ஒரே நவீன அடையாளமாக மாறிப் போய் விட்ட ஹைதராபாத் நமக்கு இல்லை என்பதே சீமாந்திரா மக்களுக்குப் பெரிய அதிர்ச்சிதான். ஆனால் இன்று புதிய தலைநகராக விஜயவாடாவை அறிவித்துள்ளார் முதல்வர் நாயுடு.
அறிவித்ததோடு நில்லாமல் சிங்கப்பூரைப் போல புதிய தலைநகரம் அதி நவீன நகரமாக உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
செழுமையான விவசாய பூமி
விஜயாவாடா ஒரு செழுமையான விவசாய பூமியாகும். ஆந்திராவின் 2வது பெரிய நகரம் விஜயவாடாதான். ஹைதராபாத்துக்கு அடுத்த இடத்தில் விஜயவாடா உள்ளது. இன்று சீமாந்திராவின் முதன்மை நகரமாக அது மாறப் போகிறது.
வளம் கொழிக்கும் இரு ஆறுகளின் தழுவலில்
கிருஷ்ணா நதியும், புடமேறு நதியும் இந்த நகரைத் தழுவிச் செல்கின்றன. இதனால்தான் விஜயவாடா பிராந்தியமே அருமையான விவசாய பூமியாக காட்சி தருகிறது.
வெற்றியின் நகரம்
விஜயவாடா என்பதற்கு வெற்றியின் நகரம் என்று பொருள் வரும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரும் கூட. ஆதி காலத்தில் இதற்கு பெஸவாடா என்ற பெயர் இருந்தது. இதுதான் பின்னர் விஜயவாடா என்று மருவி விட்டது.
11 லட்சம் மக்கள்
விஜயவாடா நகரில் 2011 கணக்குப்படி மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 11 லட்சமாக இருந்தது. தற்போது இது உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வசிப்பதாக புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது.
வயலும் வயல் சார்ந்த நகரமும்
மற்ற நகரங்களைப் போல இல்லாமல், விஜயவாடாவின் நகர்ப் புறப் பகுதியில் வளமையான விவசாயம் இன்றும் கூட சிறப்பாக உள்ளது. நகரையொட்டி விவசாய நிலங்கள் ஏராளம் உள்ளது.
வர்த்தக நகரமும் கூட
விவசாய நகரமாக மட்டுமல்லாமல் வர்த்தக நகரமாகவும் விஜயவாடா திகழ்கிறது. மேலும் ஆந்திராவிலேயே மிகவும் தூய்மையான நகரமும் இதுதான்.
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் நிலையம்
இந்தியாவின் மிகப் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்று என்று கூறும் அளவுக்கு விஜயவாடா ரயில் நிலையம் மிகப் பெரியதாகும். பல மாநில ரயில்களின் சந்திப்பாகவும் இது திகழ்கிறது.
மக்கள் கருத்தை மதித்து
புதிய தலைநகராக மக்கள் கருத்தை மதித்து, உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஜயவாடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாயுடு தெரிவித்துள்ளார்.
கடலோர ஆந்திர நகரம்
ஆந்திராவின் இரு பெரும் பகுதிகளில் ஒன்றான கடலோர ஆந்திராவில் விஜயாவாடா அமைந்துள்ளது.
கல்வியில் சிறந்த விஜயவாடா
கல்விக்குப் பெயர் போனது விஜயவாடா. இங்கு பல புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி.ஆர். பெயரில் இங்கு மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. மேலும் விளையாட்டுக்கும் பெயர் போனது விஜயவாடா.
கம்மா சமூகத்தினர் அதிகம்
இந்தப் பிராந்தியத்தில், நாயுடுவின் கம்மா நாயுடு இனத்தவர்கள்தான் இங்கு செல்வாக்கு மிக்கவர்களாக, செல்வந்தர்களாக, பலமானவர்களாக திகழ்கின்றனர். நாயுடுவுக்கும் கூட இப்பிராந்தியத்தில்தான் மிகுந்த ஆதரவும் உள்ளது.
என்னவாகும் விவசாய நிலங்கள்?
பெருமளவில் விவசாய நிலங்கள்தான் விஜயவாடா உள்ளது. எனவே புதிய தலைநகருக்குத் தேவையான நிலங்களை பெரும்பாலும் விவசாய நிலங்களில்தான் கையகப்படுத்த வேண்டி வரும். எனவே விவசாயத் தொழில் பாதிக்காத வகையில் அதை எப்படி நாயுடு செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.