கர்நாடக அரசு மீது அதிருப்தி: சாகித்ய அகாடமி விருதை வாங்க மறுக்கும் இளம் கன்னட எழுத்தாளர் !
பெங்களூர்: பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, இளம் கன்னட எழுத்தாளர் டி.கே.தயானந்த் தனக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை வாங்க மறுத்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள கல்யாண்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, இளம் கன்னட எழுத்தாளர் டி.கே.தயானந்த் தனக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை வாங்க மறுத்துள்ளார்.
தயானந்தின் முதல் கட்டுரைத் தொகுப்பான ரஸ்தே நக்சத்திராவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என மத்திய அரசு கடநத் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது. விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சாகித்ய அகாடமிக்கு தயானந்த் எழுதியுள்ள கடிதத்தில், பகுத்தறிவாளர் கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடக அரசின் அணுகுமுறையை கண்டித்துள்ளதுடன், கொலையாளிகளை கைது செய்ய அரசு தவறிவிட்டதாகவும் சாடியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு விருது வாங்கி மகிழ்ச்சி அடைய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னைப்போன்ற இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு விருது வழங்கி வரும் அகாடமிக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலக்கிய விழாவை தயானந்த் மற்றும் சில எழுத்தாளர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.