'ஃபேனை' நீங்களே வச்சுக்குங்க.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு சின்னம் நிரந்தரமானது!
ஹைதராபாத்: சீமாந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்கு இடைக்காலமாக வழங்கப்பட்டிருந்த மின்விசிறி சின்னம் தற்போது நிரந்தரமாகியுள்ளது. மேலும் அக்கட்சிக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதையொட்டி அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கியதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும், பிலிவந்தலா சட்டசபை தொகுதியில் அவரது தாயார் விஜயம்மாவும் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றனர். அதன் பின்னர் நடந்த இடைத் தேர்தலில் 18 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சிக்கு கிடைத்தனர். ஆனாலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படியான வாக்கு சதவீதத்தை அக்கட்சி பெறவில்லை என்பதால் கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சீமாந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 25 நாடாளுமன்ற தொகுதியிலும், 175 சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டது. அவரது கட்சிக்கு மின் விசிறி சின்னமும் ஒதுக்கப்பட்டது.
தேர்தலில் 9 எம்.பி. தொகுதியிலும் 70 எம்.எல்.ஏ. தொகுதியிலும் வெற்றி பெற்றது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். மேலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு நிகராக ஓட்டுக்களையும் அள்ளியது.
இதையடுத்து தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்து சின்னத்தையும் நிரந்தரமாக்கியுள்ளது.
தற்போது சீமாந்திராவில் தெலுங்கு தேசத்திற்கு அடுத்த இடத்தையும், ஒட்டுமொத்த ஆந்திராவில், 3வது பெரிய மாநிலக் கட்சியாகவும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.